ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திப்போரா மாவட்டம் ஹஜின் அருகே இருக்கும் மிர் மொஹாலா என்ற கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதனையடுத்து, இன்று காலை அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர்.
சில மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கிச் சண்டையில் இரு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே, அப்பகுதியில் உள்ள ஒரு பிரிவினர் பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதனால், பாதுகாப்பு படையினர் என்கவுண்டர் ஆபரேஷனை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். கூடுதல் படையினர் வரவழைக்கப்பட்டு கல் வீச்சாளர்களை கட்டுப்படுத்திய பின்னர் மீண்டும் என்கவுண்டர் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.