கோப்பு படம் 
செய்திகள்

சமூக இடைவெளியை கடைபிடிக்க தென்னை மரத்தில் இருக்கை அமைத்த ஊழியர்

திண்டுக்கல் அருகே சமூக இடைவெளியை வாடிக்கையாளர்கள் கடைபிடிக்க தென்னை மரத்தில் இருக்கை அமைத்த ஊழியர் பாராட்டை பெற்று வருகிறார்.

வடமதுரை:

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் ஒருசில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதனை மீறும் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அய்யலூரில் கண்ணன் என்பவர் நூடுல்ஸ் கடை நடத்தி வருகிறார். இவர் கொரோனா ஊடரங்கு காரணமாக வேலை இல்லாமல் இருந்த நிலையில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக தென்னை மரத்தாலான இருக்கைகளை தயார் செய்தார். இப்பகுதியில் தென்னை விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. மழை இல்லாததால் பட்டுப்போன மரங்களை விவசாயிகள் வெட்டி அதனை செங்கல் சூளைக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.

இதுபோன்ற மரங்களை விலைக்கு வாங்கி அதனை பொதுமக்கள் அமரும் வகையில்சிறு சிறு துண்டுகளாக வெட்டி இருக்கைகள் அமைத்துள்ளார். மரங்களில் பலவித வண்ணங்களில் பெயிண்ட் அடித்தும் கொரோனா விழிப்புணர்வு வாசகங்களை எழுதியும் சமூக இடைவெளியில் இருக்கைகள் அமைத்துள்ளார்.

3 மீட்டர் இடைவெளியில் இருக்கைகள் அமைத்து இதனை மற்ற கடைக்காரர்களும் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகிறார். இது அவரது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இதே தென்னை மரத்தில் வேறு வகையிலான நாற்காலிகள் அமைக்கவும் முயற்சி எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT