மும்பை:
மும்பையில் எல்பின்ஸ்டோன் சாலை ரெயில்வே நிலையத்தில் கடந்த செப்டம்பர் 29-ம் தேதி காலையில் மக்கள் கூட்டம் அதிகம் இருந்தது. அவர்கள் குறுகலான நடைமேம்பாலம் ஒன்றில் சென்று கொண்டு இருந்தனர். திடீரென அங்கு ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில் மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த விபத்து பற்றி தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.
இந்த பாலத்தினை பல பேர் தொடர்ச்சியாக பயன்படுத்தி வருகின்றனர். அவர்களில் பலர், ரெயில்வே அதிகாரிகள் மற்றும் அரசாங்கத்திற்கு கடிதம் மற்றும் டுவிட்டர் வழியே பாலத்தின் நிலைமை பற்றி தெரிவித்துள்ளனர் என மனுவில் கூறப்பட்டு உள்ளது.
அங்கு ஏற்பட்ட புரளி நடந்து சென்றவர்களிடம் அச்சத்தினை ஏற்படுத்தி உள்ளது. இது தீவிரவாத சதியா? என போலீசார் விசாரணை மேற்கொள்ள வேண்டும். இந்த கோணத்தில் விசாரிக்கும்படி தேசிய புலனாய்வு கழகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டு உள்ளது.
இதனை விசாரித்த நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு இதற்கு பதிலளிக்கும்படி மேற்கு ரெயில்வே மற்றும் தேசிய புலனாய்வு கழகத்திற்கு இன்று நோட்டீஸ் ஒன்று அனுப்பியுள்ளது. இந்த மனு 3 வாரங்களுக்கு பின் விசாரிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்தது.