இந்தியா முழுவதும் யானைகள் வழித்தடங்களில் கட்டுமானப் பணிக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதேபோல் முதுமலை சரணாலயத்தை ஒட்டியுள்ள மசினகுடி கிராமத்தில் யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்து விடுதி மற்றும் ஓட்டல்கள் கட்டுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்ததுடன், தமிழகம் மட்டுமின்றி, நாடு முழுவதும் யானைகள் வழித்தடங்கள் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு தெளிவான முடிவை தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, யானைகள் வழித்தடம் தொடர்பாக மத்திய அரசு கடந்த ஆண்டே வரைவு திட்டத்தை அனுப்பியிருப்பதாகவும், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் தற்போது வரை பதிலளிக்கவில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்தது.