செய்திகள்

ஆம்பூர்-செங்கத்தில் மின்சாரம் தாக்கி 2 பேர் பலி

ஆம்பூர் மற்றும் செங்கத்தில் மின்சாரம் தாக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

ஆம்பூர்:

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள பச்சக்குப்பம் டேங்க் தெருவை சேர்ந்தவர் பச்சையப்பன். இவரது மகன் கவியரசு (வயது 17). இவர் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு கூலி வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில், நேற்றிரவு கவியரசு வீட்டில் இருந்தார். அப்போது, பலத்த மழை பெய்து கொண்டு இருந்தது. வீட்டில் இருந்த கவியரசு, டி.வி. பார்க்க ‘சுவிட்ச்சை’ போட்டார். அப்போது, மின்சாரம் தாக்கியது.

மின்சாரம் பாய்ந்ததில் அவர், துடிதுடித்து நிகழ்விடத்திலேயே சுருண்டு விழுந்து பலியானார். குடும்பத்தினர் அவரை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் சென்றனர்.

மருத்துவ பரிசோதனை செய்த டாக்டர்கள், கவியரசு இறந்துவிட்டதை உறுதி செய்தனர். இதை கேட்டு, குடும்பத்தினர், உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

பிரேத பரிசோதனைக்கு உடல் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து, ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பெரிய கல்தாம் பாடியை சேர்ந்தவர் வெங்கடேசன் (34). விவசாயி. இவர், தனது விவசாய நிலத்தில் உள்ள மின் மோட்டார் அறையில் ஏற்பட்ட சிறு பழுதை சரி செய்ய முயற்சித்துள்ளார்.

அப்போது, எதிர்பாராத விதமாக வெங்கடேசன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தார்.

பாய்ச்சல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பூபதி, வெங்கடேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் இச்சம்பவம் குறத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.