மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி 
செய்திகள்

ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

ஆலங்குளம் அருகே தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக மோட்டாரை போடும்போது மின்சாரம் பாய்ந்து விவசாயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மாலை மலர்

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே உள்ள மேலகலங்கல் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 39), விவசாயி. இவருக்கு காசிதாய் என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இவருக்கு சொந்தமாக அப்பகுதியில் தோட்டம் ஒன்று  உள்ளது. 

தோட்டத்தில் மக்காசோளம் பயிரிட்டுள்ளதால் அதற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மோட்டாரை ராமகிருஷ்ணன் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரின் உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட ராமகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  

இதையடுத்து அங்கிருந்தவர்கள் ஊத்துமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் ராமகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.