எலக்ட்ரீசியனின் உறவினர்கள் தென்பாகம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட போது எடுத்த படம். 
செய்திகள்

தூத்துக்குடியில் எலக்ட்ரீசியன் மரணம்- போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை

தூத்துக்குடியில் விபத்தில் இறந்த எலக்ட்ரீசியனின் உறவினர்கள், போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாலை மலர்

தூத்துக்குடி:

தூத்துக்குடி டி.எம்.சி. காலனியை சேர்ந்தவர் சங்கர் என்ற சின்னா (வயது 37). இவர் எலக்ட்ரீசியன் மற்றும் பிளம்பிங் வேலை செய்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் மைதானத்தில் மின்விளக்கு பொருத்தும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த சங்கர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

இந்த நிலையில் இறந்த சங்கரின் உறவினர்கள் இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தென்பாகம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.