செய்திகள்

மின்சார ரெயிலில் தொங்கியபடி பயணம் - என்ஜினீயரிங் மாணவர் மின்கம்பத்தில் மோதி பலி

மின்சார ரெயிலில் தொங்கியபடி பயணம் செய்தபோது மின்கம்பத்தில் மோதி என்ஜினீயரிங் மாணவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாலை மலர்

சென்னை:

கிண்டியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 18). இவர் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயிலில் பயணம் செய்தார்.

ரெயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் ஜெயச்சந்திரன் படிக்கட்டில் தொங்கியபடி சென்றார்.

கிண்டி அருகே வளைவில் திரும்பி ரெயில் வந்த போது தண்டவாளம் அருகே இருந்த மின் கம்பத்தில் ஜெயச்சந்திரனின் தலை மோதியது.

இதில் நிலை தடுமாறிய அவர் ரெயிலில் இருந்து கீழே விழுந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் மின்சார ரெயிலை நிறுத்தினர்.

இது குறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து படுகாயம் அடைந்த ஜெயச்சந்திரனை மீட்டு குரோம்பேட்டையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.