முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள கந்தபரிச்சான் ஆற்றின் மேற்கு பகுதி கோட்டகத்தின் அருகே உள்ளது வீரன்வயல் கிராமம்.
இந்த கிராமத்திற்கு ஆலங்காட்டில் இருந்து விளை நிலங்கள் வழியாக மின்சார கம்பங்கள் அமைத்து மின்சாரம் கொண்டு வரப்படுகிறது.
வீரன்வயலில், தனமணி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் மின்கம்பம் அமைக்கப்பட்டு உயர் அழுத்த மின்கம்பியானது செல்கின்றது. இந்த நிலையில் நேற்று மதியம் மின்கம்பி தனமணியின் வயலில் அறுந்து விழுந்தது.
மின்கம்பி அறுந்து விழுந்ததில் அறுவடை செய்யப்பட்டு கிடந்த கதிர்கள் மற்றும் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த நெற்கதிர்கள் எரிய தொடங்கின. உடனடியாக அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகளும், தொழிலாளர்களும் எரிந்து கொண்டு இருந்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ வேகமாக எரிந்ததால் தீயை அணைக்க முடியவில்லை.
பின்னர் முத்துப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் விஸ்வநாதன் மற்றும் தீயணைப்பு வீரர்கள், கிராம நிர்வாக அலுவலர் ராஜராஜ சோழன் மற்றும் அப்பகுதி மக்களும் சேர்ந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இருப்பினும் இந்த தீ விபத்தில் 2 ஏக்கர் பரப்பிலான சம்பா நெல் முழுவதும் எரிந்து நாசமானது. #tamilnews