செய்திகள்

வால்பாறையில் அரசு பஸ் மோதி மின் வாரிய ஊழியர் பலி

வால்பாறையில் மோட்டார்சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் மின் வாரிய ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

வால்பாறை:

வால்பாறை சோலையார் எஸ்டேட் 3-வது பிரிவு குடியிருப்பை சேர்ந்தவர் உதயவாணன் (வயது 38). மின்வாரிய ஒப்பந்த பணியாளர்.

நேற்று வால்பாறையில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். முடீஸ் சாலை நல்லகாத்து எஸ்டேட் பகுதியில் சென்றபோது எதிரே அரசு பஸ் வந்தது.

எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியது. இதில் உதயவாணன் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி உதயவாணன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ்சை ஓட்டி வந்த மயில்ராவணனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.