செஞ்சி:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மேலஒலக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 70), விவசாயி. இவரது மனைவி முனியம்மாள் (60).
கணவன்-மனைவி இருவரும் தங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்துக்கு சென்றனர். அங்குள்ள மோட்டார் கொட்டகையில் மின் விளக்கை போடுவதற்காக பெருமாள் சுவிட்சை அழுத்தினார்.
அப்போது அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது. அவர் கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு மனைவி முனியம்மாளும் அங்கு ஓடிவந்து கணவரை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரது உடலிலும் மின்சாரம் பாய்ந்தது. சிறிது நேரத்தில் கணவன்- மனைவி இருவரும் பரிதாபமாக இறந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்த செஞ்சி சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.