தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய காட்சி. 
செய்திகள்

திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்ட அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர் ஆலோசனை

உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்ட அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ் கான் ஆலோசனை நடத்தினார்.

மாலை மலர்

திருச்சி:

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை மே 14-ந்தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது.

ஆனால் மே 14-ந்தேதிக்குள் நடத்த முடியாது என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் அந்த மனுவில் ஜூலை மாத இறுதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்கும் விதமாக கால அவகாசத்தை வழங்க வேண்டும் என்று கோரியிருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழக தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக திருச்சியில் இன்று திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்ட அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ் கான் ஆலோசனை நடத்தினார்.

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் 3 மாவட்டங்களில் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இதில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியலை தயார்படுத்துவது குறித்து முக்கிய அறிவுரைகள் வழங்கப்பட்டன.

கூட்டம் முடிந்ததும், மாலிக் பெரோஸ்கான் கூறுகையில், 3 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. அவை முறையாக நடந்துள்ளதாக என்பது தொடர்பாக இன்று ஆய்வு நடத்தப்பட்டது. 5.1.2017 தேதி இறுதி வாக்காளர் பட்டியல் படி வார்டு வாரியாக சரி பார்க்கும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

அதேபோல் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதியில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட டெபாசிட் செய்தவர்கள் நகர்ப்புறங்களை பொறுத்தவரை 100 சதவீதம் திரும்ப பெற்றுக்கொண்டனர். கிராமப்பகுதிகளில் யாரும் டெபாசிட் தொகையை திரும்ப பெற வரவில்லை. அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.