கைது 
செய்திகள்

திண்டுக்கல் அருகே முதியவர் கொலையில் வாலிபர் கைது

திண்டுக்கல் அருகே முதியவர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் பொன்மாந்துறை புதுப்பட்டி அருகே முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமசாமி (வயது 60 ).

இவர் கலிங்க தெருவில் உள்ள மாட்டு கொட்டகையில் தங்கி இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த அண்ணாமலை என்பவருடன் சேர்ந்து மது குடித்துள்ளார். போதை தலைக்கு ஏறியதும் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியது .

பின்னர் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த அண்ணாமலை ராமசாமியை கீழே தள்ளிவிட்டு அவரது தலையில் கல்லை தூக்கிப் போட்டார் .இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே ராமசாமி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து ராமசாமி மகன் ராஜசேகர் கொடுத்த புகாரின் பேரில் திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் இது தொடர்பாக தலைமறைவாக இருந்த அண்ணாமலையை (35) பிடிப்பதற்கு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வம் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் குட்டியபட்டி பிரிவு அருகே அண்ணாமலை பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் தெய்வம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் இளஞ்செழியன், அழகுபாண்டி, வேல்முருகன், சுந்தரம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

தன்னிடம் தகராறு செய்ததால் போதையில் தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்ததாக அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

பின்னர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.