கொலை 
செய்திகள்

திருப்பூரில் அண்ணன் தலையில் குழவி கல்லை போட்டு கொன்ற தம்பி

திருப்பூரில் அண்ணன் தலையில் குழவி கல்லை போட்டு கொன்ற தம்பியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மாலை மலர்

திருப்பூர்:

திருப்பூர் கருவம்பாளையம் தொடக்கப்பள்ளி வீதியை சேர்ந்தவர் குணசேகரன்(வயது49). பனியன் தொழிலாளி. இவரது தம்பி ராஜேந்திரன்(40). இவரும் தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார்.

இவர்கள் 2 பேருக்கும் திருமணம் ஆகவில்லை. தனது, தாய், தந்தையுடன் கருவம்பாளையத்தில் வசித்து வந்தனர்.

குடிப்பழக்கம் உடைய 2 பேரும் தினமும் வேலை முடிந்து குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறில் ஈடுபட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

நேற்று மாலையும் 2 பேரும் மதுகுடித்து விட்டு வீட்டிற்கு வந்தனர். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த ராஜேந்திரன் தனது அண்ணனை தகாத வார்த்தைகளால் திட்டி விட்டு வீட்டை விட்டு சென்றார்.

இந்த நிலையில் இரவு 9 மணிக்கு குடிபோதையில் ராஜேந்திரன் வீட்டிற்கு வந்தார். அப்போது குணசேகரன் தம்பி ராஜேந்திரனை திட்டியதாக கூறப்படுகிறது.

இதில் வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த ராஜேந்திரன் தனது அண்ணனை தாக்கி கீழே தள்ளினார். பின்னர் வீட்டில் இருந்த குழவி கல்லை எடுத்து குணசேகரனின் தலையில் போட்டார்.

இதில் குணசேகரனின் தலை இரண்டாக பிளந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் சம்பவம் குறித்து திருப்பூர் மத்தியபிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குணசேகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அண்ணணை கொலை செய்த தம்பி ராஜேந்திரனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.