இளவேனில் வளரிவான் 
செய்திகள்

உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி - தமிழக வீராங்கனை இளவேனிலுக்கு தங்கம்

ரியோ டி ஜெனிரோ உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்ற தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கம் வென்றுள்ளார்.

ரியோடிஜெனீரோ:

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி (ரைபிள் மற்றும் பிஸ்டல்) பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனீரோவில் நடைபெற்று வருகிறது.

இதில் பங்கேற்ற தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கம் வென்று முத்திரை பதித்தார்.

20 வயதான அவர் 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் கலந்து கொண்டு தங்கம் வென்று சாதித்தார். இளவேனில் 251.7 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்தார். அவர் இங்கிலாந்து வீராங்கனை மிஷின்டோசை பின்னுக்கு தள்ளினார்.

இங்கிலாந்து வீராங்கனை 250.6 புள்ளியுடன் வெள்ளிப்பதக்கம் பெற்றார். சீன தைபேயை சேர்ந்த யங்-ஷின்லின் வெண்கலம் வென்றார்.

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் தங்கம் வென்ற 3-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை இளவேனில் பெற்றார்.

உலகக் கோப்பையில் சீனியர் பிரிவில் அவருக்கு கிடைத்த முதல் தங்கம் இதுவாகும். இதற்கு முன்பு ஜெர்மனியில் உள்ள முனிச்சில் நடந்த போட்டியில் அவர் 4-வது இடத்தை பிடித்தார்.

இளம் வீராங்கனையான இளவேனி கடலூரில் பிறந்தவர். தற்போது அவர் குஜராத் மாநிலத்தில் வசித்து வருகிறார்.

இந்த போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனை அஞ்சும் 6-வது இடத்தை பிடித்தார். இன்னொரு வீராங்கனை அபுர்வி சண்டிலா இறுதிப்போட்டிக்கு கூட முன்னேறவில்லை.

இந்த ஆண்டில் 4 உலகக் கோப்பையில் இந்திய பெண்கள் 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் பெற்ற 3-வது தங்கம் இதுவாகும்.

SCROLL FOR NEXT