புவனேஷ்வர்:
ஒரிசா மாநிலத்தில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் கோவில் திருவிழாவுக்கு சென்று திரும்பிய 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஒரிசா மாநிலம் மச்ஹோகன் மாவட்டத்தில் உள்ள நீமலா என்ற பகுதியில் 'ஸ்னான பூர்னிமா' என்ற திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற பக்தர்கள் இன்று காலை ஆட்டோ ரிக்ஷாவில் சொந்த ஊருக்கு திரும்பினர். ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள சந்தோல் என்ற கிராமத்தின் அருகே ஆட்டோ வந்து கொண்டிருக்கும் போது எதிரே வந்த லாரியானது திடீரென பயங்கரமாக
மோதியது.
இந்த கோர விபத்தில் ஆட்டோவிலிருந்த 8 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இருவர் படுகாயங்களுடன் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டார். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய டிரைவரை வலை வீசி தேடி வருகின்றனர்.
இந்நிலையில், பலியானவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், விபத்தை ஏற்படுத்திய டிரைவரை உடனே கைது செய்யவேண்டும் எனவும் பலியானவர்களின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து, போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர்கள் மறியலை கைவிட்டனர்.