இலங்கையில் நேற்று முன்தினம் ஈஸ்டர் தின கொண்டாட்டத்தின்போது தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்டவற்றில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 200-க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டனர்.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் அனைத்தும் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் குண்டுவெடிப்பில் உயிர் இழந்தவர்களுக்கு உலக தலைவர்கள் தங்களின் அனுதாபங்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில், இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் கோபுரத்தின் மின்விளக்குகள் நேற்று முன்தினம் இரவு அணைக்கப்பட்டன.
எப்போதும் நள்ளிரவில் மின்விளக்குகளால் ஜொலிக்கும் ஈபிள் கோபுரம் இலங்கை மக்களின் துயரத்தில் பங்கு கொண்டது. இதனால் ஈபிள் கோபுரம் இருள் சூழ்ந்து காணப்பட்டது.