பொன்னேரி:
பொன்னேரியில் அ.தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மொழிப்போரில் உயிர் நீத்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
கடந்த 1965-ம் ஆண்டு இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டது. இதனால் பிற மாநில மொழிகள் அழிந்து போகும் என்பதால் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
அதில் உயிர்நீத்த தியாகிகளுக்கு இந்நாளில் வீர வணக்கம் செலுத்துவோம். அம்மாவின் ஆட்சி தொண்டர்களை கட்டுகோப்போடு வைத்து ஆட்சி நடைபெற்றது. அதே ஆட்சிதான் இப்போது நடைபெறுகிறது.
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் 11 மாதங்களாக இந்த ஆட்சி கவிழ்ந்து விடும் என கூறி வருகிறார். இது தொண்டர்களால் ஆட்சி செய்யும் அரசு. இந்த ஆட்சியை கட்சியை விசுவாசமிக்க தொண்டர்கள் கழக நிர்வாகிகள் தாங்கி பிடித்துள்ளதால் ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது.
ஸ்டாலின் கூட்டணியை நம்பி தான் போட்டியிட வந்துள்ளார். அவர் எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்துகிறார். அதனை முறியடித்து வருகிறோம்.
பேருந்து கட்டணம் குறித்து தொழிலாளர்களை தூண்டி விட்டது ஸ்டாலின் தான். ஆட்சிக்கு நெருக்கடி தரவே ஸ்டாலின் முயல்கிறார்.
ரூ. 922 கோடி பாக்கி வைத்தது தி.முக. ஆட்சி தான். அதனை அ.தி.மு.க. அரசு தான் செலுத்தியது. தி.மு.க. ஆட்சி திறமையற்ற ஆட்சியாக இருந்தது.
22 ஆயிரம் பேருந்துகளில் நாள்தோறும் ரூ.1 கோடி 40 லட்சம் பயணம் செய்கின்றனர்.
சினிமாவில் கோடிகளில் புரண்டவர்கள் தற்போது அரசு கஜானா குறித்து பேசுவது வேடிக்கையாக உள்ளது.
டி.டி.வி.தினகரன் கட்சிக்கு எப்படி வந்தார், உறுப்பினராக இருக்கிறாரா என்பது கூட தெரியாது. கொல்லைப்புறமாக ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்ற நினைக்கும் அவரது எண்ணம் நிறைவேறாது. ஓராயிரம் தினகரன் வந்தாலும் கட்சியை உடைக்க முடியாது.
கிரிமினல் என்பதால் டி.டி.வி. தினகரனை ஜெயலலிதா அவரை விலக்கி வைத்திருந்தார். இடைத்தேர்தலில் அவர் எப்படி வென்றார் என்பது குறித்து அவரது ஆதரவாளர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையரே கருத்து தெரிவிக்கும் நிலையில் ஆர்.கே.நகர் தேர்தலில் டி.டி.வி. தினகரன் வெற்றி பெற்றுள்ளார்.
டீசல் விலையேற்றத்தால் கனத்த இதயத்துடன் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், நாளொன்றிற்கு 9 ஆயிரம் கோடி இழப்பை போக்குவரத்து கழகம் சந்தித்து வந்த நிலையில் இதற்கு மேலும் நிதிச்சுமையை அரசு ஏற்க முடியாததால் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது.
தாமிரபரணி ஆறு மட்டுமே தமிழகத்தில் தோன்றி கடலில் சென்று கலப்பாதாகவும், வேறு நதிகள் தமிழகத்தில் இல்லாததால் அண்டை மாநிலங்களையே தமிழகம் நம்பி இருப்பதாகவும், காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் விரைவில் நல்ல தீர்ப்பு வரும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #tamilnews