கோவை:
அ.தி.மு.க. எம்எல்ஏக்கள் விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகியோர் கட்சி விரோத செயல்களில் ஈடுபடுவதாக அதிமுக கொறடா, சபாநாயகரிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் அவர்கள் 3 பேரிடமும் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதையடுத்து தி.மு.க. சார்பில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவது தொடர்பாக சட்டசபை செயலாளரிடம் கடிதம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 4 சட்டமன்றத் தொகுதிகளில் பிரசாரத்தை தொடங்குவதற்காக இன்று கோவை வந்து சேர்ந்தார். கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
திமுக எந்த அடிப்படையில் சபாநாயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி மனு கொடுத்தது என தெரியவில்லை. கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதால் அதிமுகவைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் மீது சபாநாயகரிடம் கொறடா புகார் அளித்தார். அதன்படி நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் கொடுத்தால் திமுகவினர் ஏன் கொந்தளிக்கிறார்கள்? எதிர்க்கட்சி தலைவருக்கு ஏன் கோபமும் கொந்தளிப்பும் ஏற்படுகிறது? இதன்மூலம் திமுகவுக்கும் டிடிவி தினகரன் கட்சிக்கும் இருக்கும் நெருக்கம் வெளிப்பட்டுவிட்டது.
தமிழகத்தில் 22 தொகுதி இடைத் தேர்தல்களிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.
தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்சினை இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என தேர்தலுக்கு முன்பே அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சனை இருந்தால் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #TNElections2019 #EdappadiPalaniswami