வாகனங்களை முதல்-அமைச்சர் தலைமை செயலகத்தில் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார் 
செய்திகள்

காவல்துறைக்கு 2271 புதிய வாகனங்கள்- எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

காவல்துறையினரின் பயன்பாட்டிற்காக ரூ.95 கோடி செலவில் 2,271 புதிய வாகனங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மாலை மலர்

சட்டப்பேரவையில், காவல்துறை மானியக்கோரிக்கையின்போது காவல்துறையினரின் பயன்பாட்டிற்காக “கழிவு செய்யப்பட்ட 2,601 வாகனங்களுக்கு பதிலாக 1,340 எண்ணிக்கையிலான பல்வேறு வகையான வாகனங்கள் வாங்கப்படும்” என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்புக்கிணங்க, காவல் துறையினரின் பயன்பாட்டிற்காக 510 ஜீப்கள், 20 பேருந்துகள், 100 சிறிய பேருந்துகள், 50 வேன்கள், 50 லாரிகள், 4 தண்ணீர் டேங்கர் லாரிகள், 1,506 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 2,240 வாகனங்களை கொள்முதல் செய்திட 91 கோடியே 78 லட்சத்து 86 ஆயிரத்து 560 ரூபாய் நிதி ஒப்புதல் அளித்து, அரசாணை வெளியிடப்பட்டு வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டன.

காவல்துறை கண்காணிப்பாளர்களின் பயன்பாட்டிற்காக 3 கோடியே 79 லட்சத்து 44 ஆயிரத்து 775 ரூபாய் செலவில் 31 ஸ்கார்பியோ வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டன.