எடப்பாடி பழனிசாமி 
செய்திகள்

பெரியாறு, கோவிலாறு அணைகளில் தண்ணீர் திறப்பு - எடப்பாடி பழனிசாமி

விருதுநகர் வத்திராயிருப்பு வட்டம், பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து 20ந் தேதி முதல் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

விருதுநகர் வத்திராயிருப்பு வட்டம், பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, விருதுநகர் வத்திராயிருப்பு வட்டம், பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து 20.11.2019 முதல் 29.2.2020 வரை பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால் கண்மாய்களின் மூலம் 1676.48 ஹெக்டேர் நிலங்களும், நேரடி பாசன கால்வாய் மூலம் 249.47 ஹெக்டேர் நிலங்களும் ஆக மொத்தம் 1925.95 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு, உயர் மகசூல் பெற வேண்டுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.