மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை கொண்டாடுவது தொடர்பாகவும், திட்டங்களை வகுப்பது தொடர்பாகவும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய அளவிலான குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் இன்று மாலை நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி சென்றார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல் அமைச்சர் பழனிசாமி கூறியதாவது:-
பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் அவரிடம் காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் நிலை குறித்து பேசுவேன். காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வரும் என நம்புகிறோம்.
காவிரி வழக்கின் தீர்ப்பை மத்திய அரசு அமல்படுத்தும் என்று நம்புகிறேன். காந்தியின் 150-வது பிறந்த நாள் விழா குறித்த கூட்டத்தில், தமிழகம் சார்பில் கருத்து தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.