எடப்பாடி பழனிசாமி 
செய்திகள்

தமிழகத்தில் பிளாஸ்மா தெரபி- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

தமிழகத்தில் கொரோனா வைரசுக்கு பிளாஸ்மா தெரபி மூலம் சிகிச்சை அளிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மாலை மலர்

சென்னை:

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணப்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பிளாஸ்மா தெரபி என்ற சிகிச்சையை பரிந்துரை செய்துள்ளது.

பிளாஸ்மா என்பது ரத்தத்தில் உள்ள ஒரு திரவம். ரத்தத்தில் 45 சதவீதம் சிவப்பு மற்றும் வெள்ளை தட்டையணுக்கள் உள்ளன. எஞ்சிய 55 சதவீதம்தான் பிளாஸ்மா. ஒரு வைரஸ் மனித உடலில் வந்தால் அதை எதிர்த்து போராடும் ஆன்டிபாடிகள் (நோய் எதிர்ப்பு திறன்) பிளாஸ்மாவில்தான் தோன்றுகின்றன. இதன் காரணமாகத்தான் பிளாஸ்மா மூலம் நோயாளிகளை குணப்படுத்தலாம் என கூறப்படுகிறது.

ஒருவரது உடலில் இருந்து ரத்தம் எடுப்பதுபோல் பிளாஸ்மா எடுப்பதற்கென தனி எந்திரங்கள் இருக்கின்றன. பிளாஸ்மா தானம் அளிக்கப்படும் நபருக்கு, ரத்ததானம் வழங்க வரும் நபர்களுக்கு செய்யப்படுவது போன்று பல்வேறு பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. அந்த பரிசோதனைக்கு பின்னரே அவரது உடலில் இருந்து முதலில் ரத்தம் எடுக்கப்பட்டு அதில் இருந்து பிளாஸ்மா பிரித்தெடுக்கப்படுகிறது.

டெல்லி, கேரளா, குஜராத், பஞ்சாப் போன்ற பல மாநிலங்கள் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சையை பயன்படுத்த தொடங்கி உள்ளன. இதன்மூலம் பல நோயாளிகளின் உடல்நிலை தேறி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரசுக்கு பிளாஸ்மா தெரபி மூலம் சிகிச்சை அளிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சோதனை முறையில் பிளாஸ்மா தெரபி மூலம் 18 பேர் குணமடைந்ததால் ரூ.2 கோடியில் பிளாஸ்மா வங்கி நிறுவ தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிளாஸ்மா சிகிச்சை விரைவில் தொடங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை ஸ்டான்லி, ஓமந்தூரார், திருச்சி, சேலம், கோவை அரசு மருத்துவமனைகளிலும் பிளாஸ்மா தானம் பெறப்படும் என்றும் பிளாஸ்மா தானம் செய்பவர்கள் 18 முதல் 65 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் 14வது நாளில் பிளாஸ்மா தானம் செய்யலாம். சர்க்கரை நோய், இருதய நோய், சிறுநீரக நோய், புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள் தானம் செய்ய இயலாது.

தகுதியானவர்கள் தயக்கமும், பயமுமின்றி தாமாக முன்வந்து பிளாஸ்மா தானம் செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.