செய்திகள்

சட்டசபையை கூட்டி எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: முத்தரசன் பேட்டி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

மாலை மலர்

சங்கராபுரம்:

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு நடை பயண பிரசார நிறைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொள்வதற்காக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சங்கராபுரத்துக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது சம்பந்தமாக 6 மாதமாக தமிழக மக்கள் ஒருமித்த குரலுடன் போராடினர். சட்டசபையில் 2 மசோதாக்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.

ஆனால் ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என கூறிவிட்டனர். மத்திய, மாநில அரசுகளுக்கு பாடம் கற்பிக்க அரியலூர் மாணவி அனிதா ‘நீட்’ தேர்வுக்காக தனது வாழ்க்கை பயணத்தையே முடித்துகொண்டார். மத்திய அரசின் கொத்தடிமையாக மாநில அரசு உள்ளது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என தினகரன் தனது ஆதரவாளர்களான 21 சட்டமன்ற உறுப்பினர்களுடன் தமிழக கவர்னரிடம் தனித்தனியாக மனு கொடுத்து உள்ளார்.

எடப்பாடி பழனிசாமி சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இதற்கு உத்தரவிடும் அரசியலமைப்பு கடமை கவர்னரிடம் உள்ளது. அவர் அதை செய்யாமல் இருந்து வருகிறார்.

பாரதிய ஜனதா உத்தரபிரதேசம், குஜராத் போன்று தமிழகத்திலும் தனது பலத்தை பெருக்கி கொள்ளலாம் என நினைத்து வருகின்றது. அது நடக்காது. உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சியை மக்கள் தோற்கடிப்பார்கள் என்பதால் உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.