சட்டசபையில் இன்று மீன் வளம், கால்நடை பராமரிப்பு மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் அனிதா ராதாகிருஷ்ணன் (தி.மு.க.) பேசுகையில், தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி இல்லை. தெற்கு தேய்கிறது என்று குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
அதற்கு தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தென் மாவட்டங்களுக்கு நிறைய தொழிற்சாலைகள் வர உள்ளதாக பட்டியலிட்டார்.
அப்போது அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-
எனது தொகுதியில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் கொண்டு வர வேண்டும் என அன்றைய மாநிலங்களவை உறுப்பினராக இருந்த கனிமொழி எம்.பி. மத்திய அரசை வலியுறுத்தினார்.
இஸ்ரோவிற்கு நிலங்களை வேகமாக ஒதுக்கி கொடுத்தால் ராக்கெட் ஏவுதளம் அங்கே அமையும் போது, அது சார்ந்த தொழில்களும் அங்கே அமையும் என்றார்.
இதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்து பேசியதாவது:-
இஸ்ரோவுக்கு இடம் ஒதுக்குவது பற்றி உறுப்பினர் இங்கு பேசினார். இஸ்ரோவின் தலைவரே என்னை நேரில் சந்தித்து இந்த திட்டம் குறித்து பிரதமரிடம் தெரிவித்ததாகவும் நீங்கள் (தமிழக அரசு) தேவையான நிலத்தை ஒதுக்கி தந்தால் அந்த திட்டத்தை உடனே ஆரம் பிப்பதாக தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க நிலம் வழங்கி உள்ளோம். கனிமொழி சொன்னதால் திட்டம் வரவில்லை.
இஸ்ரோவுக்காக நிலம் ஒதுக்கி தந்தால் அந்த திட்டத்தை உடனே கொண்டு வர தயாராக இருப்பதாக கூறினார்.
அதன் அடிப்படையில் தான் ராக்கெட் ஏவுதளம் அமைக்க இடம் ஒதுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
பூமத்திய ரேகைக்கு அருகே ராக்கெட் அனுப்பும் போது அந்த பகுதி வருவதால் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.