சென்னை:
முதல்-அமைச்சர் எடப் பாடி பழனிசாமி அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மாவட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பாலாறு படுகை நான்காம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடக்கோரி, திருமூர்த்தி நீர்த்தேக்கத் திட்டக்குழு உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
திருமூர்த்தி நீர்த்தேக்கத் திட்டக்குழு உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருப்பூர் மாவட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பாலாறு படுகை நான்காம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு திருமூர்த்தி அணையிலிருந்து 8.10.2017 முதல் உரிய இடைவெளி விட்டு இரண்டு சுற்றுகளாக மொத்தம் 3,800 மி.க. அடிக்கு மிகாமல் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தைப் பொறுத்து தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.
இதனால், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி வட்டம் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம், காங்கேயம் மற்றும் தாராபுரம் வட்டங்களில் உள்ள மொத்தம் 94,068 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.