செய்திகள்

எடப்பாடி பழனிசாமி அரசு பெட்ரோல்-டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும்- தினகரன் அறிக்கை

பெட்ரோல்-டீசல் மீதான வரியை குறைக்க எடப்பாடி பழனிசாமி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினகரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.#edappadipalanisamy #TTVDinakaran

மாலை மலர்

அம்மா மக்கள் முன்னேற்றக்கழக  துணை  பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு என்பது மக்கள் மீது நடத்தப்படும் மிக பெரிய தாக்குதல். விலைவாசி உயர்வு அனைத்திற்கும் காரணம் பெட்ரோல், டீசல் விலை உயர்வுதான்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை உயர்வை காரணம் காட்டும் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சரின் விளக்கம் என்பது கண்டனத்திற்குரியது.

எண்ணை நிறுவனங்களே ஒவ்வொரு நாளும் விலையை நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்ற ஆபத்தான முடிவை மத்திய அரசு எடுத்த காரணத்தினால், பெரும் பின்னடைவை இந்திய மக்கள் சந்தித்து வருகின்றனர். ஆனால், கர்நாடக தேர்தல் பிரச்சாரம் நடைப்பெற்ற காலத்தில் மட்டும், மந்திரம் போல் உயராமல் இருந்த பெட்ரோல் டீசல் விலை, தேர்தல் முடிந்த உடன் உயர்ந்து விட்ட விநோதத்தை மத்திய பா.ஜ.க. அரசு தான் விளக்க வேண்டும்.

தங்களின் ஆதாய அரசியலுக்காக, பெட்ரோல்டீசல் விலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்து இப்பொது தேர்தல் முடிந்தவுடன் மக்களின் தலையில் தாங்கமுடியாத இப்பெரும் சுமையை ஏற்றக் காரணமாய் இருக்கும் மத்திய அரசிற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

தெற்காசியாவிலேயே இந்தியா தான் அதிக அளவு பெட்ரோல்-டீசல் மீதான வரிகளை சுமத்துகிறது என்பதையும் இத்தருணத்தில் நான் நினைவுபடுத்துகிறேன். இப்பிரச்சினையில் பழனிசாமியின் அரசு வழக்கம் போல கொஞ்சம் கூட அக்கறை காட்டாமல் உள்ளது, மிகவும் அத்தியாவசியமாகி விட்ட பெட்ரோல் டீசலின் மூலம் தங்களின் வரி வருவாயை பெருக்குவதில் முனைப்பு காட்டும் மத்திய, மாநில அரசுகள், தங்கள் போக்கை மாற்றிக்கொண்டு பெட்ரோல் டீசல் மீதான வரிகளை உடனடியாக குறைத்து மக்களை காக்க வேண்டும்.