சென்னை:
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கடந்த 7 மாத காலமாக இரண்டாக பிளவுபட்டு நின்ற அ.தி.மு.க., கடந்த 21-ந் தேதி இணைந்தது.
இரு அணிகளை வழிநடத்திய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கைகோர்த்தனர்.
இதையடுத்து, அ.தி.மு.க.வை வழிநடத்த 15 பேர் கொண்ட குழுவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டார். இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார்.
தற்காலிகமாக கட்சியை வழிநடத்தவே ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான இந்த குழு அமைக்கப்பட்டது. எனவே, அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை விரைவில் கூட்டி, கட்சியின் பொதுச் செயலாளரான சசிகலாவை நீக்கிவிட்டு, புதிய பொதுச் செயலாளரை முடிவு செய்ய திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் டி.டி.வி.தினகரன் தலைமையில் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக 21 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
தினகரன் அணியில் மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் இணைவார்கள் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். கவர்னரை சந்தித்தும் அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாநில நிர்வாகிகள் என சுமார் 200 பேர் கலந்துகொள்கின்றனர்.
கூட்டத்தில், தற்போதைய அரசியல் சூழ்நிலை பற்றி விவாதிக்கப்படுகிறது. மேலும் பொதுக்குழு கூட்டத்தை கூட்டும் தேதி முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட இருக்கிறது. கட்சியை வழிநடத்த அமைக்கப்பட்டுள்ள 15 பேர் ஒருங்கிணைப்பு குழுவுக்கு ஒப்புதல் பெறப்படுகிறது. அதற்கு கட்சி விதிகளில் சட்ட திருத்தம் தேவைப்படும் பட்சத்தில் அதற்கான ஒப்புதலும் பெறப்பட இருக்கிறது.
மேலும், எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ.க்களையும், நிர்வாகிகளையும் டி.டி.வி.தினகரன் தன் பக்கம் இழுத்து வரும் நிலையில், அதை தடுப்பதற்கான முயற்சியும், ஆட்சியை தக்கவைப்பதற்கான முயற்சியும் இன்றைய கூட்டத்தில் மேற்கொள்ளப்பட இருக்கிறது. அது தொடர்பாக, நிர்வாகிகள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பேசுவதுடன், அவர்களின் கருத்துக்களையும் கேட்க இருக்கின்றனர்.
கட்சியையும், ஆட்சியையும் எக்காரணத்தைக் கொண்டும் விட்டுக்கொடுத்து விடக் கூடாது என்பதில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உறுதியாக உள்ளனர். எனவே, டி.டி.வி.தினகரன் பக்கம் செல்லும் நிர்வாகிகளை தடுப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது.
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் (செப்டம்பர்) 5 அல்லது 6-ந் தேதி நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பொதுவாக, அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெறுவது வழக்கம். இந்த முறையும், அந்த மண்டபத்தில் தான் கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது. பொதுக்குழு கூட்டத்தில், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்கவும் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
அதே நேரத்தில், டி.டி.வி.தினகரனும் பொதுக்குழு உறுப்பினர்களை திரட்டி, போட்டி பொதுக்குழு கூட்டத்தை கூட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளார். இதற்காக, தனது ஆதரவாளர்களை கொண்ட ஒரு குழுவை அமைக்கும் முயற்சியிலும் அவர் இறங்கியுள்ளார். இதனால், அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், டி.டி.வி.தினகரனுக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது.
அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெறுவதையொட்டி, கூட்டத்தில் பங்கேற்க டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்களும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு வரும் பட்சத்தில், மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகும் என்பதால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.