தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து பேசியதாவது:
இதுவரை ஏறக்குறைய 20 நாட்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளேன். ஒவ்வொரு நாளும் இந்த ஆளும் அதிமுக மீதான மக்களின் வெறுப்பு தெரிகிறது. இன்றும் விழுப்புரத்திலே இந்த வேகாத வெயிலில் நீங்கள் கூடியிருப்பதை வைத்தே உங்கள் மனதின் எண்ணத்தினை நான் அறிந்தேன். தன்னை விவசாயி என சொல்லிக் கொண்டிருக்கும் எடப்பாடி, விவசாயிகளின் தற்கொலைக்கு காரணமான விஷவாயு ஆவார்.
அன்றைக்கு கழக தொண்டர்கள் கணித்தது போல் இன்று திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராகியுள்ளேன். இந்த தொகுதியில் நிற்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார், நல்ல எழுத்தாளர், பேச்சாளர் மற்றும் சிறந்த வழக்கறிஞர் ஆவார். சட்டமன்றத்திலே ஏற்கனவே என்னுடன் சேர்ந்து பணியாற்றி இருக்கிறார். இவரது உரையை கலைஞர் அவர்களே பாராட்டி பேசியுள்ளார்.
இந்த தொகுதிக்கும், திமுகவிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. விழுப்புரத்தில் பள்ளிகள், பொறியியல் கல்லூரிகள் ஆகியவை கழக ஆட்சியில் தான் திறக்கப்பட்டுள்ளன என்பதை உணர்ந்து, சிந்தித்து வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார். #MKStalin #DMK #LoksabhaElections2019