ஆர்.கே.நகர் தேர்தலில் பணப்பட்டுவாடா செய்ததாக தன் மீது வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது என வெளியான தகவலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மறுத்துள்ளார்.
ஆர்.கே நகர் பணப்பட்டுவாடா தொடர்பாக வழக்கறிஞர் வைரக்கண்ணன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தேர்தல் ஆணையத்திடம் இருந்து சில தகவல்களை பெற்றுள்ளார்.
அதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதும் அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்வதற்கான பரிந்துரையை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மற்றும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது தெரியவந்துள்ளது.
ஆனால் இதுவரை அவர்கள் மீது இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இதனால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி அந்த வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த விசாரணை நாளை வர உள்ளது.