புதுடெல்லி:
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய 2ஜி ஊழல் வழக்கில் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கனிமொழி, ராசா உள்ளிட்ட 14 பேரையும் விடுவித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 3 தனியார் நிறுவனங்களும் விடுவிக்கப்பட்டன. சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகளில் இருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளதால் தி.மு.க.வினர் இந்த தீர்ப்பை கொண்டாடி வருகின்றனர்.
இந்த தீர்ப்பு குறித்து பல்வேறு தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியிருந்தார்.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பண பரிவர்த்தனை செய்தது தொடர்பான வழக்கில் தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.
அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவு செய்ய உள்ளதாக சி.பி.ஐ. அதிகாரிகள் கூறுகின்றனர். தீர்ப்பின் நகல் கிடைத்ததும் அதனை ஆய்வு செய்து, சட்ட வல்லுநர்களின் கருத்தைக் கேட்டு மேல்முறையீடு செய்வதா? வேண்டாமா? என்பதை அறிவிப்பதாகவும் கூறியுள்ளனர்.