கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சாரதா சிட்பண்ட் நிதி நிறுவனத்தில் பொதுமக்கள் டெபாசிட் செய்த பணத்தில் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டது.
இந்த மோசடி பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. சுதிப்தா சென் உள்பட சாரதா சிட்பண்ட் நிதி நிறுவன அதிபர்கள், இயக்குனர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த மோசடியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, சாரதா நிறுவனத்தின் ஊடகப் பிரிவு தலைவராக செயல்பட்டு வந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. குணால் கோஷ் கைது செய்யப்பட்டு கடந்த 2016- ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் தற்கொலைக்கு முயன்று உயிர் பிழைத்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு குணால் கோஷுக்கு பொருளாதார அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சம்மன் அனுப்பியுள்ளனர்.