செய்திகள்

மல்லையாவுக்கு எதிராக கூடுதல் ஆதாரம்: லண்டன் கோர்ட்டில் தாக்கல் செய்ய அதிகாரிகள் முடிவு

லண்டனில் தலைமறைவாக உள்ள விஜய் மல்லையாவுக்கு எதிராக, கூடுதல் ஆதாரங்களை கோர்ட்டில் தாக்கல் செய்ய இந்திய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

மாலை மலர்

புதுடெல்லி:

பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா, தனது கிங் பிஷர் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக இந்தியாவில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து சுமார் 9,000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்றார். ஆனால், அவர்

வாங்கிய கடனை வங்கிகள் திரும்ப கேட்டதற்கு, பணத்தை தராமல் வெளிநாட்டுக்கு தப்பியோடினார்.

இதைதொடர்ந்து மல்லையா மீது பண மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. ஆகியவை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தன.

இங்கிலாந்து நாட்டுக்கு தப்பிச் சென்ற விஜய் மல்லையா, தற்போது லண்டனில் தஞ்சமடைந்து வசித்து வருகிறார். அவர்மீது நடவடிக்கை எடுக்க முயற்சித்து வருவதாக மத்திய அரசு கூறிவருகிறது. ஆனாலும், அவர் அங்கு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

இதற்கிடையே, விஜய் மல்லையாவை நாடு கடத்த வேண்டும் என இங்கிலாந்து அரசை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக லண்டன் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மல்லையாவை நாடு கடத்துவதற்கு தேவையான ஆதாரங்களை கொடுத்து விசாரணையை நடத்துவதற்காக சிபிஐ மற்றும்

அமலாக்கத்துறை அதிகாரிகள் லண்டன் சென்றுள்ளனர்.

இந்நிலையில், விஜய் மல்லையா மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக கூடுதல் ஆதாரங்களை லண்டன் கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் அடங்கிய குழு லண்டன் சென்றுள்ளது. இரண்டு துறைகளின் அதிகாரிகளும் லண்டன் கோர்ட்டில் மல்லையாவுக்கு எதிராக கூடுதல்

ஆதாரங்களை தாக்கல் செய்ய உள்ளனர்.

இந்தியா சார்பில் ஆஜராகி வாதாடும் அரசு வழக்கறிஞர் குழுவிடமும் ஆலோசனை நடத்துகின்றனர். அமலாக்கத்துறை சார்பில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்களையும் தாக்கல் செய்ய உள்ளனர்’ என தெரிவித்துள்ளனர்.