புது டெல்லி:
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், 2020-21ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் இருப்பதாகவும், மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் இருக்கும் என்றும் கூறியிருந்தார். இதுதவிர துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள், பல்வேறு புதிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற்றிருந்தன.
இந்த பட்ஜெட் குறித்து ஆதரவு மற்றும் எதிர் கருத்துக்களை அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வெளியிட்டுவருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதிமந்திரியுமான ப.சிதம்பரம் இன்று வெளியான பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
''நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து 6-வது காலாண்டாக சரிவை சந்தித்துவருகிறது. பொருளாதாரம் அதல பாதாளத்திற்குள் சிக்கி மிகப்பெரிய சவாலை சந்தித்துக்கொண்டிருக்கிறது என்ற உண்மையை ஏற்க மத்திய அரசு முழுமையாக மறுத்துவருகிறது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டு 6 முதல் 6.5 சதவிகிதம் வரையில் இருக்கும் என மத்திய அரசு கூறியிருப்பது மிகவும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் உள்ளது மட்டுமல்லாமல் பொறுப்பற்ற பேச்சு’’ என அவர் தெரிவித்துள்ளார்.