செய்திகள்

தாய் இறந்த சோகத்தில் பட்டினி கிடந்து உயிரை விட்ட வாலிபர்

பாகூர் அருகே தாய் இறந்த சோகத்தில் வாலிபர் பட்டினி கிடந்து உயிரை விட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகூர்:

பாகூர் அருகே சின்ன ஆராய்ச்சி குப்பத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 38). மனநிலை பாதிக்கப்பட்ட இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனது தாய் சரோஜா பராமரிப்பில் இருந்து வந்தார். தனது தாய் தவிர, யார் சாப்பாடு கொடுத்தாலும் பால முருகன் சாப்பிட மாட்டார்.

இதற்கிடையே சரோஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென இறந்து போனார்.

தாய் இறந்தது முதல் சோகத்தில் பாலமுருகன் உணவு எதுவும் சாப்பிடாமல் இருந்து வந்தார். அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் சாப்பாடு கொடுத்த போது அதனை ஏற்காமல் பட்டினியாகவே இருந்து வந்தார்.

தண்ணீர்கூட குடிக்காமல் தொடர்ந்து பல நாட்களாக பட்டினியாக இருந்து வந்ததால் நேற்று பாலமுருகன் பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்து அவரது அண்ணன் கிருஷ்ண செல்வம் பாகூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews

SCROLL FOR NEXT