துபாய் சர்வதேச விமான நிலையமானது உலகில் பரபரப்பாக இயங்கும் விமான நிலையங்களில் ஒன்றாகும். சுமார் 7 ஆயிரத்து 200 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான கட்டமைப்பில் இயங்கும் இந்த விமான நிலையத்தில் 140-க்கும் மேற்பட்ட விமான நிறுவனங்கள் உலகின் அனைத்து முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் விமானங்களை இயக்கி வருகிறது.
அமீரகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மீண்டும் அனைத்து நாடுகளுக்குமான பன்னாட்டு விமான சேவைகள் புத்துயிர் பெற உள்ளது. இதனை அடுத்து தற்போது துபாய் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து பகுதிகள் மற்றும் விமானங்களில் உச்சகட்ட கிருமி நீக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக விமான நிலையத்திற்குள் இயங்கும் பஸ், ரெயில், விமானத்தில் ஏறும் படிக்கட்டுகள், ஏரோ பிரிட்ஜ் எனப்படும் விமானத்திற்குள் செல்லும் பாதை, பயணிகள் காத்திருக்கும் அறை, கழிவறைகள், குடியேற்ற பிரிவு, சுங்கத்துறை, விமான பாதுகாப்பு படை அலுவலகம் என்று விமான நிலையத்தின் அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.