செய்திகள்

போதை பொருள் விற்பனை: முன்னாள் நாசா விஞ்ஞானி ஐதராபாத்தில் கைது

போதை பொருள் விற்பைனையில் ஈடுபட்டதாக ஹைதராபாத்தை சேர்ந்த முன்னாள் நாசா விஞ்ஞானி அனிஷ் மற்றும் அவர் நண்பர் ரித்துல் அகர்வால் ஆகியோரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

மாலை மலர்

ஹைதராபாத்:

போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த சில மாதங்களாக ஹைதராபாத் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் நடத்தி வந்த தேடுதல் வேட்டையில், போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த சுமார் பத்து டீலர்களை கைது செய்தனர். அவர்களது கைபேசியில் உள்ள தகவல்களை ஆராய்ந்து பார்த்ததில் செகந்திராபாத்தை சேர்ந்த, அனிஷ் டுண்டூ போதை பொருள் கடத்தலில் இடுபட்டிருந்தது போலீசாருக்கு தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து செகந்திராபாத்தில் உள்ள அனிஷின் அலுவலகத்தில் வைத்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவர் அளித்த தகவலின் பேரில் அவரது கூட்டாளியான ரித்துல் அகர்வால் என்பவரை நம்பலியில் வைத்து போலீசார் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட அனிஷ், டேராடூனில் பிரபலமான டூன் பள்ளியில், பள்ளிக்கல்வியை முடித்துள்ளார். பின்னர், அமெரிக்காவில் உள்ள சின்சினாட்டி பல்கலைகழகத்தில் விண்வெளி, வானூர்தி மற்றும் வானியல் பொறியியல் பட்டப்படிப்பு முடித்துள்ளார். அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவிலும் ஒரு ஆண்டு பணியாற்றிய அவர் 2012-ம் ஆண்டு முதல் ஹைதராபாத்தில் சொந்த தொழில் நடத்தி வந்துள்ளார். மற்றொரு குற்றவாளியான ரித்துல், பி.பி.ஏ. பட்டதாரி. அவர் சொந்தமாக இரும்புக் கடை நடத்தி வந்துள்ளார். 

அவர்கள் கடந்த மே மாதம் முதல் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாகவும், இதுவரை சுமார் எட்டுமுறைக்கு மேல் கொக்கைன் போன்ற போதைபொருட்கள் கடத்தலில் சம்மந்தப்பட்டிருப்பதாகவும் போலீசார் கூறியுள்ளனர். 

போதைப் பொருட்கள் கொரியர் மூலமாக வருவதாகவும் அவற்றில் நெதர்லாந்து நட்டின் முத்திரைகள் இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது முதல் இவர்கள் இருவரும் இந்த கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.