செய்திகள்

தீவிரவாத தாக்குதலில் இருந்து அமர்நாத் பக்தர்களை காப்பாற்றிய டிரைவருக்கு உயரிய விருது

காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் இருந்து அமர்நாத் பக்தர்களை காப்பாற்றிய பஸ் டிரைவருக்கு உயரிய விருதான 'உத்தம் ஜீவன் ரக்‌ஷ பதக்கம்' வழங்கப்பட உள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

ஜம்மு-காஷ்மீரின் அனந்தநாக் பகுதியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 10-ம் தேதி அமர்நாத் யாத்திரையை முடித்து திரும்பி வந்துகொண்டிருந்தவர்களின் பேருந்தை குறி வைத்து தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

57 பயணிகள் சென்ற அந்த பேருந்தை ஷேக் சலீம் என்ற டிரைவர் ஓட்டி வந்தார். துப்பாக்கி சூடு தொடங்கியதும் டிரைவர் சலீம் பேருந்தை நிறுத்தி இருந்தால் உயிர் பலி எண்ணிக்கை அதிகமாயிருக்கும். ஆனால், அவர் பேருந்தை நிறுத்தாமல் பாதுகாப்பான இடத்தை நோக்கி பேருந்தை வேகமாக ஓட்டிச் சென்றார். இருட்டான பகுதிக்குள் சென்று பேருந்தினை பத்திரமாக நிறுத்தினார்.

இதனால் 50 பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டது. டிரைவர் சலீமை பல அரசியல் தலைவர்கள் பாராட்டினர். அவரது துணிச்சலான செயலை பாராட்டி குடிமக்களுக்கான இரண்டாவது உயரிய விருதான 'உத்தம் ஜீவன் ரக்‌ஷ பதக்கம்' வழங்கப்பட உள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.