செஞ்சி:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வளத்தி சாலையில் செஞ்சி கலால் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த இண்டிகோ காரை மறித்தனர். போலீசாரை பார்த்தும் காரில் வந்தவர் தப்பி ஓட முயன்றார். உஷாரான போலீசார் அவரை மடக்கி பிடித்து காரை சோதனை போட்டனர். அந்த காரில் 50 லிட்டர் எரிசாராயம், குவார்ட்டர் அளவு கொண்ட 21 அட்டை பெட்டிகளில் 1,008 மதுப்பாட்டில்கள் இருந்தது.
இதனை காருடன் பறிமுதல் செய்த போலீசார் காரை ஓட்டி வந்த டிரைவர் வீரசெய்யன் (வயது 24) என்பவரை கைது செய்தனர். இவர் வானூர் அருகே உள்ள வி.மருதூர் கிராமத்தை சேர்ந்தவர்.
விசாரணையில் அவர் புதுவையில் இருந்து மதுப்பாட்டில்கள், எரிசாராயம் கடத்தி வந்ததாக தெரிவித்தார். என்றாலும் யாருக்கு இதனை கடத்தி சென்றார்? இதற்கு உடந்தையாக இருப்பது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.