செய்திகள்

ஈரோடு அருகே தண்ணீர் பிடிக்கும் தகராறில் வாலிபர் அடித்து கொலை

ஈரோடு அருகே இன்று காலை தண்ணீர் பிடிக்கும் தகராறில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பவானி:

ஈரோடு அருகே உள்ள ஆர்.என்.புதூர் மாதேஸ்வரன் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 34). இன்று காலை அப்பகுதியில் உள்ள பொது குடிநீர் குழாயில் தண்ணீர் வந்தது. இந்த தண்ணீர் பிடிப்பதற்கு அப்பகுதி ஆண்களும், பெண்களும் குடங்களுடன் போட்டி போட்டு முண்டியடித்தனர். இதில் அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது,

அப்போது தண்ணீர் பிடித்துக் கொண்டு இருந்த செல்வத்துக்கும், அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சிலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதை அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் தட்டிகேட்டார். பெண்கள் தண்ணீர் பிடித்துக் கொண்டு இருக்கும் போது ஏன் அங்கு செல்கிறாய்? என்று அவர் கேட்டாராம். இதில் ஆத்திரமடைந்த செல்வம் கத்தியால் அவரை குத்தியதாக தெரிகிறது.

இதை கண்டு கத்திகுத்தில் காயமடைந்த நபரின் உறவினர்கள் அங்கு வந்து செல்வத்தை தாக்கினார்கள். இதில் அவர் கீழே விழுந்தார். கீழே விழுந்த அவருக்கு தலையில் பலத்த அடிபட்டது. இதில் அவர் மயங்கினார். உடனே அக்கம் பக்கத்தினர் செல்வத்தை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து சித்தோடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். செல்வம் உடல் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.