பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல வைர வியாபாரி நிரவ் மோடிக்கு எதிராக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாட்டை விட்டு தப்பி ஓடிய அவரை கைது செய்ய சர்வதேச போலீசாரின் உதவியும் நாடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் சுங்க வரி இல்லா இறக்குமதி பொருட்களை சட்ட விரோதமாக பயன்படுத்தி நிரவ் மோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதை வருவாய் புலனாய்வுத்துறை (டி.ஆர்.ஐ.) கண்டறிந்தது. அதாவது விலை உயர்ந்த வைரம் மற்றும் முத்துக்கள் இறக்குமதி மூலம் ரூ.52 கோடி அளவுக்கு அவர் சுங்க வரி ஏய்ப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
எனவே இது தொடர்பாக நிரவ் மோடி மற்றும் குஜராத்தின் சூரத்தை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் அவரது 3 நிறுவனங்கள் மீது வருவாய் புலனாய்வுத்துறை அமைப்பு அதிகாரிகள் சூரத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு பலமுறை சம்மன் அனுப்பியும், நிரவ் மோடி ஆஜராகவில்லை.
எனவே அவருக்கு எதிராக சூரத் கோர்ட்டு சமீபத்தில் கைது வாரண்டு பிறப்பித்தது. இந்த வாரண்டை டி.ஆர்.ஐ. அதிகாரிகள் இ-மெயில் மூலம் நிரவ் மோடிக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.
இதற்கிடையே தப்பி ஓடிய நிரவ் மோடி, லண்டனில் உள்ள அவரது நகைக்கடை மாடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தது குறித்து தற்போது செய்திகள் வெளியாகி உள்ளன. லண்டனின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஓல்டு பாண்ட் தெருவில் உள்ள ‘நிரவ் மோடி’ என்ற அவரது கடையின் மாடியில்தான் அவர் வசித்து வந்துள்ளார்.