புதுடெல்லி:
டெல்லி ரெயில் நிலையத்தில் கள்ள நோட்டுகள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் ரெயில் நிலையத்தில் அதிகாரிகள் கண்காணித்த போது சந்தேகப்படும்படியாக ஒருவர் நிற்பதை கண்டனர்.
அவரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவரிடம் ரூ.4¼ லட்சம் மதிப்புள்ள 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், வங்காளதேசத்தில் அச்சடித்து டெல்லி, அரியானா, மேற்கு வங்காளம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கள்ள நோட்டுகளை வினியோகம் செய்வதாக தெரிவித்தார்.
மேலும் அவர் சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என்பதும், பீகாரில் இருக்கும் ஒருவரிடம் கள்ள நோட்டுகளை ஒப்படைக்க உள்ளதாகவும் கூறினார். அவர் கொடுத்த தகவலின் பேரில் பீகாரில் கள்ள நோட்டுகளை பெற இருந்தவரும் நேற்று கைது செய்யப்பட்டார்.
இதுவரை நாடு முழுவதும் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.