செய்திகள்

கோடிகளில் புரளும் கஞ்சா கடத்தல் - ஆந்திராவில் ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

ஆந்திர மாநிலம் எனிகேபடு என்ற இடத்தில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். #AndhraPradesh #CannabisCaptured

மாலை மலர்

ஐதராபாத்:

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அமைந்துள்ள பகுதி எனிகேபடு. இந்த பகுதியில் அதிக அளவிலான கஞ்சா கடத்தப்படுவதாக வருவாய்த்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்துக்கு இடமான 2 நபர்களை கண்ட போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். வருவாய்த்துறை மற்றும் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த இடம் குறித்து அந்த இருவரும் தகவல் அளித்தனர்.

இதையடுத்து அந்த இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கடத்துவதற்கு தயார் நிலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 842.72 கிலோ எடை கொண்ட கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இந்த கஞ்சாவின் மதிப்பு 1 கோடியே 26 லட்சத்து 40 ஆயிரத்து 800 ரூபாய் என வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து மேலும், கஞ்சா கடத்தலில் தொடர்புடையவர்களை கைது செய்யும்பொருட்டு, போலீசார் மற்றும் வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். #AndhraPradesh #CannabisCaptured