பாட்னா:
பீகார் மாநிலத்தின் பார்ஹ் பகுதியில் நடைபெற்ற பல குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய பிரபல ரவுடி குட்டு சிங். அவன் போலீசாரால் கைது செய்யப்பட்டு பாட்னா மாவட்டத்தில் உள்ள பார்ஹ் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான்.
இந்நிலையில், இன்று நடைபெற இருந்த ஒரு வழக்கு விசாரணைக்காக அவனை பார்ஹ் நீதிமன்றத்திற்கு போலீசார் அழைத்து வந்தனர். அழைத்து வரப்பட்ட குட்டு சிங் மீதும், அவன் கூட்டாளிகள் மீது நீதிமன்ற வளாகத்தினுள் வைத்து சில மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் அங்கிருந்து தப்பியோடினர்.
இந்த தாக்குதலில் குட்டு சிங் மற்றும் அவனது இரு கூட்டாளிகள் மீது குண்டு பாய்ந்தது. இதில் குட்டு சிங் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தான். மற்ற இரண்டு பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.