சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னை கலைப்பள்ளியுடன் இணைந்து நடத்தும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான ஓவியப்போட்டி வருகிற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடக்கிறது.
சென்ட்ரல் மெட்ரோ, எழும்பூர் மெட்ரோ, செனாய் நகர், அண்ணாநகர் கோபுரம், கோயம்பேடு, வடபழனி, அசோக்நகர், பரங்கிமலை, விமான நிலையம் மெட்ரோ, சைதாப்பேட்டை மெட்ரோ, தேனாம்பேட்டை, ஆயிரம் விளக்கு, அரசினர் தோட்டம், மண்ணடி, வண்ணாரப்பேட்டை மெட்ரோ ஆகிய 15 மெட்ரோ ரெயில் நிலையங்களில் இந்த போட்டி நடைபெறுகிறது.
சிறந்த கலைஞர் விருது 2020 தேர்ந்தெடுக்க, ஒவ்வொரு மெட்ரோ நிலையத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 ஓவியங்கள் மெட்ரோ பயணிகள் வாக்களிப்பதற்காக 15 மெட்ரோ நிலையங்களிலும் 3-ந் தேதி முதல் வைக்கப்படும். 9-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்ட்ரல் மெட்ரோவில் நடத்தப்படும் விழாவில் வெற்றியாளர்களுக்கு ரொக்கப்பரிசும், சான்றிதழும் வழங்கப்படும்.
சார்ட் பேப்பர் (¼ அளவு) சென்னை கலைப்பள்ளியால் வழங்கப்படும். ஓவியப்போட்டிக்கு தேவையான கலைப் பொருட்களை கொண்டு வருமாறு மாணவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தங்கள் பெயர்களை இன்று முதல் www.chennaiartschool.com என்ற இணைய தளத்தில் பதிவு செய்யலாம். அல்லது வருகிற 29-ந் தேதி முதல் 7448822099 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் பெயர், முகவரி மற்றும் தொடர்பு எண் ஆகியவற்றை பதிவு செய்யலாம்.