பரமக்குடி:
பரமக்குடி எமனேஸ்வரம் கிறிஸ்தவ தெருவை சேர்ந்தவர் சோனைமுத்து (45 ).நாடக கலைஞரான இவர், சலங்கை என்ற பெயரில் நடன நாட்டிய கலைக்குழு நடத்தி வந்தார்.
இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன.நேற்று, பரமக்குடி அருகே உள்ள கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு தனது இருசக்கர வாகனத்தில் இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
பரமக்குடி நகர் பகுதியான டான்பாஸ்கோ பள்ளி எதிரே தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் நிலை தடுமாறி விழுந்தார். தலையில் பலத்த காயமடைந்த சோனைமுத்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
காலையில் வாகன ஓட்டிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் பரமக்குடி நகர் போலீசார் சோனைகருப்பன் உடலை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, பரமக்குடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 மாதங்களாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வரும் சூழ்நிலையில், வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் விதமாக எந்தவிதமான அறிவிப்புப் பலகையும் வைக்காமல், சாலைகளில் பள்ளம் தோண்டி பணிகளை மேற்கொள்ளாமல் தாமதப்படுத்தியதால் இந்த உயிர்ப்பலி நடந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
விபத்து ஏற்படாத வகையில் பணிகளை மேற்கொள்ளாத, தேசிய நெடுஞ்சாலை துறையினர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பலியான சோனைமுத்து குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.