செய்திகள்

சட்டத்துக்கு புறம்பாக சொத்து சேர்த்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை: டி.ராஜா பேட்டி

சட்டத்துக்கு புறம்பாக சொத்து சேர்த்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கூறினார்.

மாலை மலர்

திருப்பூர்:

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சோவியத் சோ‌ஷலிச புரட்சியின் 100-வது ஆண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் திருப்பூரில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது.

இக் கூட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மூத்த தலைவர்கள் நல்லக்கண்ணு, தா. பாண்டியன், மாநில துணை செயலாளர் கே. சுப்பராயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 2- வது நாள் நடைபெற்ற நிறைவு கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜா கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது-

தமிழகத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தின் செயல்பாடுகள் மிகவும் கேள்விக்குரியதாக உள்ளது. இந்தியாவின் கூட்டாட்சி நெறிமுறை மற்றும் அரசியல் சட்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டே கவர்னர் செயல்பட வேண்டும்.

மாநில நிர்வாகத்தில் அவர் தலையிடுவது மாநிலத்தின் உரிமைகளை மீறும் செயலாகும். சட்டத்துக்கு புறம்பாக சொத்து சேர்த்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை நாங்கள் தவறாக கருதவில்லை. அதே நேரம் சேகர் ரெட்டி, ராம்மோகன் ராவ் போன்றவர்களின் இல்லங்களில் நடைபெற்ற சோதனைகள் பற்றியும், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றியும் தமிழக மக்களுக்கு தெரிவிக்கப்பட வில்லை. அதே போல் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டில் நடைபெற்ற தற்போதைய சோதனைகளை பற்றியும் நமக்கு தெரியபோவது இல்லை.

இவ்வாறு டி. ராஜா கூறினார்.