செய்திகள்

வரதட்சணை கொடுமையில் பெண் சாவு: கணவருக்கு 10 ஆண்டு ஜெயில்

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்ட கணவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

மாலை மலர்

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா இ.என்.பாளையத்தை சேர்ந்தவர் சையத்இனயதுல்லா (வயது 36). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அல்மாஸ் என்பவருக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. சையத்இனயதுல்லா பெயிண்டராக வேலை செய்து வந்தார்.

திருமணம் நடந்த சில மாதங்களிலேயே சையத்இனயதுல்லா, அவரது தாய் மற்றும் உறவினர்கள் வரதட்சணை கேட்டு அல்மாசை சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் அல்மாஸ் மனவேதனை அடைந்தார். கணவர் மற்றும் உறவினர்கள் தொடர்ந்து சித்ரவதை செய்ததால் கடந்த ஆண்டு அல்மாஸ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து எலவனாசூர் கோட்டை போலீசில் அல்மாசின் சகோதரர் தனியுல்லா புகார் செய்தார். அதில் தனது சகோதரியிடம் வரதட்சணை கேட்டு சையத்இனயதுல்லா மற்றும் அவரது தாய் உள்பட 5 பேர் சித்ரவதை செய்து உள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த அல்மாஸ் தற்கொலை செய்துள்ளார் என்று கூறியிருந்தார்.

இதன் பேரில் பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக சையத் இனயதுல்லா உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விழுப்புரம் மகளிர் சிறப்பு நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஜூலியட்புஷ்பா குற்றம் சாட்டப்பட்ட சையத்இனயதுல்லாவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மற்ற 5 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.