நியூசிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி தோற்றது தொடர்பாக டோனி விமர்சனத்துக்கு உள்ளானார்.
மிகப்பெரிய இலக்கு இருக்கும் போது அவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் 20 ஓவர் போட்டியில் இருந்து டோனி விலகி இளம் வீரர்களுக்கு வழிவிட வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் வி.வி.எஸ்.லட்சுமணன், அஜித் அகார்கர் ஆகியோர் விமர்சித்து இருந்தனர்.
இதற்கு கேப்டன் விராட் கோலி பதிலடி கொடுத்து இருந்தார். நல்ல உடல் தகுதியுடன் சிறப்பாக விளையாடும் டோனியை விமர்சிப்பது நியாயமற்றது என்று கூறி அவருக்கு ஆதரவு தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் இலங்கைக்கு எதிரான 20 ஓவர் போட்டி அணியில் இருந்து டோனியை நீக்கிவிட்டு வேறு ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
நியூசிலாந்துக்கு எதிரான தொடர் முடிந்துவிட்டது. அடுத்து இலங்கையுடன் இந்திய அணி விளையாடுகிறது. அந்த அணி உயர்மட்ட அளவில் சமநிலையான அணி அல்ல. நாம் வாய்ப்புகளை பெறலாம்.
ஆனால் இந்த தொடருக்கு பிறகு வலிமையான தென்னாப்பிரிக்காவுடன் விளையாடுகிறோம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். இதில் கடினமாக போராட வேண்டியது இருக்கும்.
இதனால் இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரில் டோனிக்கு பதிலாக வேறு ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம். கடந்த 1½ ஆண்டுகளாக டோனி விஷயத்தில் விதிமீறல் நடந்துள்ளது. அவரது ஆட்டத்திறன் குறைந்து வருகிறது.