உயிரிழந்த தந்தை, மகன் 
செய்திகள்

தந்தை, மகன் மரண வழக்கில் ஒரு நொடி கூட விசாரணையை தாமதிக்கக் கூடாது -நீதிபதிகள்

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கில் ஒரு நொடி கூட விசாரணையை தாமதிக்கக் கூடாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மாலை மலர்

மதுரை:

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, முதல் நிலை பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவர் அளித்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நீதிபதிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

‘சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தச் சென்ற மாஜிஸ்திரேட்டை காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் காவலர் அவமதித்தது அதிர்ச்சி அளிக்கிறது. இறந்த ஜெயராஜ், பென்னிக்சின் உடல்களில் மோசமான காயங்கள் இருந்ததால், காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் இருக்கிறது.

நீதி கிடைக்கும் என ஜெயராஜ் குடும்பத்தினர் நம்புகின்றனர். எனவே, ஒரு நொடி கூட விசாரணையை தாமதிக்க கூடாது.  இந்த வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கும் முன் தடயங்களை அழிக்க வாய்ப்பு உள்ளது. சிபிஐ விசாரணையை தொடங்கும் வரை நெல்லை டிஐஜி அல்லது சிபிசிஐடி விசாரிக்க இயலுமா? என்பதை அரசிடம் கேட்டு தெரிவிக்க வேண்டும்’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

இதுபற்றி மதியம் அறிக்கை தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.